வவுனியா யாழ் ஏ 9 வீதியில் மாங்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து வீதிச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு நோக்கிச் சென்ற வாகனங்களும் அதேபோன்று வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் சென்ற வாகனங்களும் மாங்குளம் சந்தியில் நிறுத்தப்பட்டு, படையினரால் சோதனையிடப்பட்டன.
பேரூந்துகளில் சென்ற பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு அவர்கள் கொண்டு சென்ற பொதிகள் அனைத்தையும் படையினர் முழுமையாக சோதனையிட்டனர்.
பேரூந்துகளில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் சோதனையின் பின்னர் சுமார் அரை கிலோ மீற்றர் தொலைவுக்கு நடந்து சென்ற பின்னரே வாகனங்களில் ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பேரூந்துகள் தவிர்ந்த ஏனைய பார ஊர்திகள், தனியார் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
முல்லைத்தீவு மற்றும் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை ஏ 9 வீதியுடன் இணைக்கின்ற முல்லைத்தீவு வீதியும், மேற்கே துணுக்காய், மல்லாவி பிரதேசங்களை ஏ9 வீதியுடன் இணைக்கின்ற வீதியும் மாங்குளம் சந்தியில் இணைகின்றன.
இந்த மாங்குளம் சந்தியில் இராணுவ முகாம் ஒன்று பரந்த அளவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த சந்தியில் வீதிச் சோதனை முகாம் அமைக்கப்பட்டு வாகனங்களும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலைமைகள் சுமுகமாக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ள நிலையில் நாட்டின் பல இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த வீதிச் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, சோதனை முகாம்களும் அகற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே மாங்குளம் சந்தியில் இன்று படையினர் திடீரென வீதிச் சோதனை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.